'My Indian passport will be revoked later' - Mallya tells court Photograph: (VIJAY MALAYA)
இந்தியாவின் முன்னாள் தொழிலதிபராக இருந்து வந்தவர் விஜய் மல்லையா. கிங்பிஷர் எனும் பெயரில் விமானச் சேவை நிறுவனம் மற்றும் மது ஆலைகள் உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். அவர் தொழில் ரீதியாகப் பல வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன்களைத் திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால், நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். இதனால், இவரை மத்திய அரசு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளியாக அறிவித்துள்ளது. தற்போது இவர் லண்டனில் வசித்து வருகிறார்.
அதே நேரத்தில், மத்திய அரசால் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நீரவ் மோடி. இவரும் லண்டனில் வசித்து வரும் நிலையில், இருவரும் சந்தித்த போது அவர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், அவரை இந்தியாவிற்குக் கொண்டு வர மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே விஜய் மல்லையா மும்பை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தன்னை தப்பியோடிய குற்றவாளி என அறிவித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் கவுதம் அங்காட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், நீங்கள் முதலில் இந்தியாவிற்குத் திரும்புவீர்களா? என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த வழக்கை விசாரணை செய்ய முடியும் என்று மல்லையா தரப்பினரிடம் தெரிவித்தனர்.
இதற்கு, வழக்கறிஞர் மூலம் மல்லையா பதிலளித்திருந்தார். அதில், "பிரிட்டன் நீதிமன்றங்கள் எனக்கு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதித்துள்ளது. அதோடு, இந்திய பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்தியாவிற்கு என்னால் எப்போது வரமுடியும் என்பதைத் துல்லியமாகக் கூறமுடியாது" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள், "இவ்வாறு பதிலளித்தால் நீங்கள் நீதிமன்ற நடைமுறைகளைத் தவிர்ப்பதாகப் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும். பிரிட்டன் நீதிமன்றங்கள் குறித்துப் பேசும் நீங்கள் அந்த உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எப்போது இந்தியாவிற்கு வருவீர்கள் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கை மார்ச் 11 தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Follow Us