திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் 27 ஆம் தேதி வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் திருத்தணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தணி காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் வடமாநில இளைஞரின் பெயர் 34 வயதுடைய சூரஜ் என்றும், அவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்துப் பகீர் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
சம்பவத்தன்று வடமாநில இளைஞர் சூரஜ் சென்னையில் இருந்து மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் 17 வயதுடைய 4 சிறுவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் கெத்து காட்ட கத்தியுடன் ஆடியபடி அவர்கள் அதனைத் தங்களது செல்போனிலும் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் ரயிலில் பயணம் செய்த சூரஜை வெட்டுவதுபோல கத்தியைக் காட்டி மிரட்ட, மற்றொரு சிறுவன் அனைத்தையும் ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/5917-2025-12-29-17-07-42.jpg)
பின்னர் திருத்தணி ரயில் நிலையம் வந்தபிறகு சூரஜ் அங்கிருந்து நடந்து சென்றிருக்கிறார். ஆனால் அப்படியும் விடாத அந்த நான்கு சிறுவர்களும் சூரஜைப் பின்தொடர்ந்து வந்து தனியே இழுத்துச் சென்று, அங்கு வைத்து மூவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அதனை மற்றொரு சிறுவன் ரீல்ஸ் வீடியோவாக எடுத்துள்ளார். சூரஜ் தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும், இரக்கமின்றி சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், திருவாலங்காடு அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த நந்தகோபால், திருத்தணி அருகே நெமிலியைச் சேர்ந்த சந்தோஷ், அரக்கோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் நந்தகோபால், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய மூவரையும் ஜனவரி 9 ஆம் தேதி வரை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரக்கோணத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் சந்தோஷ் தற்போது படித்து வருவதால், இளஞ்சிறார் நீதிமன்ற நீதிபதி அவரைச் சொந்தப் பிணையில் விடுவித்து அவரது பெற்றோருடன் அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு மு.க.ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் மு.க.ஸ்டாலின் அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப்பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/5918-2025-12-29-17-22-04.jpg)