அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆவார். இவர் அ.தி.மு.க.வில் அக்கட்சியின் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பயணித்து வந்த நிலையில் திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், “கடந்த 6 முதல் 7 மாதங்களாக இது குறித்து மனதில் ஓடிக்கொண்டிருந்தது. என் தந்தையின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தாமதமாக முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கட்சியால் எங்கள் குடும்பத்தினர் மன வேதனை அடைந்தோம். அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. த.வெ.க.வில் இணைய என் அப்பாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டு தான் வந்தேன்.
கடந்த ஜூலை மாதத்தில் என்னுடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கட்சியிலிருந்து யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. இதனால் மனரீதியாக நிறையப் பாதிக்கப்பட்டோம். அ.தி.மு.க. ஒரு நான்கைந்து பேருக்கான கட்சியாக மாறிவிட்டது. என்னுடைய அப்பா ஒரு சீனியர் என்ற மதிப்பே இல்லை. செங்கோட்டையன் போன்று இன்றும் நிறையப் பேர் மன வருத்தத்தில் உள்ளனர். அவர்களும் இது போன்ற முடிவை எடுப்பார்கள்.
என்னுடைய அப்பா (தனபால்) த.வெ.க.விற்கு வரமாட்டார். அவர் அதிமுகவின் விசுவாசி. எங்களை முதுகில் குத்தினார்கள். எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார். அதே போன்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் கேத்ரின் எழில்மலை, இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி, சென்னை தியாகராயர் நகர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் அசோக், அதிமுகவைச் சேர்ந்த பாபுஜி கௌதம் ஆகியோரும் தங்களைத் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/22/tvk-lokesh-tamil-selvam-dhanapal-tvk-vijay-2026-02-22-10-57-12.jpg)