தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரக் காலமாக வைரஸ் காய்ச்சலின் பரவல் சற்று அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழ்நாடு முழுவதும் பரிசோதனைகளைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்புக்காக முகக்கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுரையை வழங்கியுள்ளது.
அதே சமயம் வைரஸ் காய்ச்சலினுடைய தன்மையைக் கண்டறியச் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு சிகிச்சை பெற வரும் நோயாளியின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் ஆய்வகங்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதித்த பிறகு புதிய வகை வைரஸ் கிருமியா?, ஏற்கனவே உள்ள வைரஸா என்பதைக் கண்டறிந்து அதனைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் உள்ளிட்டவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களுக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம். காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவும் சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். அதோடு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் தான் எளிதாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசத்தை அணிய வேண்டும் எனத் தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.