தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய எல். இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கைத் திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரம் செல்லவுள்ளார்.
காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த எல். இளையபெருமாள், பட்டியலின மக்களுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடியவர். இவர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது நினைவைப் போற்றும் வகையில், தமிழக முதல்வர் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், 6 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூலை 15 ஆம் தேதி காலை முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசவுள்ளார். இதனையொட்டி, புதன்கிழமை (02.07.2025) தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கத்தை ஆய்வு செய்தார். மேலும், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல்வர் தங்கவுள்ள இடம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் மக்களை நோக்கி நடந்து வருகிறார். அவர் செல்லுமிடமெல்லாம் மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாமகவில் குடும்பச் சண்டையை மறைப்பதற்காக திமுகவைக் குறைகூறி வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்,” என்றார். இவருடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.
இதேபோல், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டவர்கள், நூற்றாண்டு நினைவு அரங்கத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.