வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து துரை வைகோ தெரிவித்துள்ளதாவது, “விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ், தூத்துக்குடி மாவட்டம், பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் மற்றும் சித்திரை செல்வகுமார் ஆகிய மூன்று தமிழ் இளைஞர்கள், என்னுடைய முயற்சியால் மியான்மரில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியா திரும்பி வந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் அழைப்பின் பேரில், இன்று (19.02.2026) முதலில் மதன்ராஜின் சொந்த ஊரான சிப்பிப்பாறை கிராமத்திற்குச் சென்றேன். அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பெருந்திரளாக பங்கேற்று வரவேற்றனர். அவர்களது அன்பில் நெகிழ்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து, நவீன்குமார் மற்றும் சித்திரை செல்வகுமாரின் சொந்த ஊரான தூத்துக்குடி பெரியசாமி நகர் பகுதிக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சென்றேன். அங்கும் அவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் உணர்ச்சிப் பெருக்குடன் என்னை வரவேற்றனர். இந்த மூன்று இளைஞர்களும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, மியான்மருக்கு கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. 01.11.2025 அன்று, அவர்களின் பெற்றோர் என் திருச்சி அலுவலகத்தில் என்னைச் சந்தித்து உதவி கேட்டு கதறி அழுதனர், மிக்க வேதனை அடைந்தேன். உடனடியாக இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் மனு அளித்து தொடர்ந்து முயற்சி செய்தேன்.
என் தொடர் முயற்சிகளாலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளாலும், அந்த மூன்று இளைஞர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியா திரும்பி வந்தனர். 27.01.2026 அன்று, அவர்கள் பெற்றோருடன் என் திருச்சி அலுவலகத்தில் என்னை நேரில் சந்தித்தபோது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சியால் என் மனம் நிறைவடைந்தது. நன்றி தெரிவிக்க வந்த போதே தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேலை ஒன்று பெற்றுத் தந்து உதவுமாறு கோரினர். அவர்களின் வாழ்க்கை மீண்டும் நல்ல முறையில் தொடங்க வேண்டும் என்பதற்காக, சென்னையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து, அதற்கான நியமன ஆணைகளையும் அவர்களிடம் வழங்கினேன். பல மாதங்களாக துயரத்தில் இருந்த குடும்பங்களின் புன்னகையை இன்று நேரில் காண முடிந்தது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.
இத்தகைய மனிதக் கடத்தல் மோசடிகளில் யாரும் சிக்கிக் கொள்ளாதபடி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அங்கிருந்த இளைஞர்களிடமும், செய்தியாளர்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் கேட்டுக் கொண்டேன். துயரில் வாடிய குடும்பத்திற்கு ஆறுதலாய் அமைந்தது என் பணி என்பதில் மன நிறைவு கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/durv-2026-02-19-22-25-26.jpg)