More than 20 people survived a car hit after losing control
சிதம்பரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், அப்பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து சீர்காழியில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்கு இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கார், அதிவேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சிதம்பரம் அருகே லால்புரம் புறவழிச் சாலையோரத்தில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீதும் மோதிவிட்டு கட்டுப்பாட்டை இழந்து சாலையோர முள் புதர் பகுதியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடைபெற்ற லால்புரம் பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூருக்கு செல்வோர் வழக்கமாக கூட்டமாக நின்று டீ குடிப்பது வழக்கம். கார் அதிவேகமாக வந்ததை கவனித்த அங்கிருந்த 20-க்கும் மேற்பட்டோர் திடீரென அங்கிருந்து ஓடியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சிதம்பரம் தாலுகா காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Follow Us