உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற ஒரு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து  கொண்டு பேசினார். அவர் பேசிய இட ஒதுக்கீடு குறித்த கருத்துக்கள் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பேசிய அவர், “நம் நாட்டில் இந்து மக்கள் 2000 ஆண்டு காலமாகத் தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு பாகுபாடுகளைச் சந்தித்து வருகின்றனர். இருந்த போதிலும், அவர்கள் நாட்டிற்கு எதிராக எப்போதும் நடந்து கொண்டது இல்லை. அவர்களும் வாழ்வில் மேன்மையடைய வேண்டும்.

Advertisment

அதனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சம உரிமை கிடைக்கப்பெற வேண்டும். அதற்காக, இன்னும் 200 ஆண்டுகள் கூட இந்த இட ஒதுக்கீடு வழங்கலாம். இதற்கு இந்த சமூகம் தயாராக இருக்க வேண்டும். இதனால், நமக்கு சில இழப்புகள் இருந்தாலும், நமது சகோதரர்களின் முன்னேற்றத்திற்காக இதனை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாம் கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வேண்டும். அதோடு, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்” எனவும்  தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் கூறிய தீண்டாமை போன்ற பல்வேறு பாகுபாடுகள், நம் நாட்டில்  உள்ள அதிகப்படியான மக்களைச் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கி வருகிறது. இது போன்ற செயல்களால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதை, இந்த கருத்துக்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவும் சமயத்தில், நாட்டில் மக்களிடம் சமத்துவம் மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் ஏற்படுவதற்கு இட ஒதுக்கீடு முக்கியம் என்பதை உணர முடிவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.