ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள் - I மற்றும் தாள் - II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை (Website: http://www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

நவம்பர் 2ஆம் தேதி ஆசிரியர் தேர்வு நடக்கவிருக்கும் அதே நாளிலேயே கிறஸ்துவ மக்கள் வழிபடும் கல்லறைத் திருநாளும் நடக்கவிருக்கிறது. இதனால், கிறிஸ்துவ மக்கள் ஆசிரியர் தேர்வில் பங்கேற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்ததோடு, வேறொரு தேதிக்கு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு திமுக எம்.எல்.ஏவுமான இனிகோ இருதயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘கல்லறை திருநாள் (All Souls Day) என்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு புனித நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ம் தேதி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வரும் நாள் தான் கல்லறைத் திருநாளாகும். அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையினை சுத்தம் செய்து மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் வைத்து இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபிக்கும் நாளாகும்.

கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025 என்கின்ற ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் தாங்கள், கல்லறைத் திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தரவேண்டும் என்று தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவர்களின் சார்பாக தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். எங்களது கோரிக்கையை எப்பொழுதும் கூர்ந்து கவனித்து செயல்படுத்தி வரும் தாங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2025 ஆசிரியர் தேர்வு தேதியினை வேறு ஒரு நாட்களில் மாற்றி செயல்படுத்தி தருவீர்கள் என்று நம்பிக்கையோடு வேண்டுகோள் வைக்கின்றேன்’ எனத் தெரிவித்துள்ளது.