MK Stalin's speech at meeting organized by DMK Information Technology team
சென்னை நந்தனம் பகுதியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று (20-02-26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்று ஸ்வீப் செய்தோம். இப்போது வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் கிளீன் ஸ்வீப் செய்து திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைக்க வேண்டும். களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்களை போர்வாள் என்றும், இணையத்தில் களமாடுகிற உங்களை ஃபயர்வாள் என்று சொன்னேன். அதை டேக்லைனாக மாற்றி ஃபயர்வாள் 2026 என்று உங்களை அடையாளப்படுத்திருக்கிறீர்கள்.
அண்மையில் நம் கழகம் முன்னெடுத்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பும், எஸ்ஐஆர் பணிகளில் தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குரிமையை உறுதி செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பலரும் பாராட்டி பேசி இருந்தார்கள். அந்த பாராட்டில் ஒரு பகுதி நமது ஐடி விங்குக்கு தான் சேரும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கழக உறுப்பினர்களாக சேர்த்ததாக இருந்தாலும் சரி, அவர்களுடைய வாக்குரிமையை உறுதி செய்ததாக இருந்ததாலும் சரி அது ஐடி விங்குடைய பங்களிப்பு மிக மிக அளப்பரியது. இந்தியாவிலேயே, பூத் லெவலில் டிஜிட்டல் ஏஜென்டுகளை வைத்திருக்கக்கூடிய அரசியல் இயக்கம் என்றால் அது நம்முடைய திமுகதான். ஐடி விங் என்றால் ஆன்லைன் வேலை மட்டும் தான் பார்ப்பார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஆஃப்லைனிலும் கலக்குவார்கள் என்பதை நீங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஹாஸ்டாக்கை டிரண்ட் செய்வது மட்டும் ஆன்லைனில் வேலை இல்லை, அஜெண்டாவை செட் செய்ய வேண்டும். நாம் தான் கண்டெண்ட்டில் கிங். நூற்றாண்டுகளை கடந்த திராவிட இயக்கத்துடைய முகம் நாம். நாம் செய்திருக்கிற திட்டங்கள் தான் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது. நவீன தமிழ்நாட்டுடைய வளர்ச்சி வரலாற்றை எழுதுவதே நாம் தான்.
அப்படிப்பட்ட நம்மை கலங்கப்படுத்தி தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்றும் தமிழ்நாட்டை சிதைத்துவிடலாம் என்று நம்முடைய எதிரிகள் நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் அவதூறு. எனவே அந்த அவதூறுகளுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காமல் சோசியல் மீடியாவுக்கு அஜெண்டாவை நாம் தான் செட் செய்ய வேண்டும். டிஃபென்ஸ் மட்டுமே ஆடிக் கொண்டிருக்கக்கூடாது, அவ்வப்போது அட்டாக் மோடுக்கும் போக வேண்டும்” என்று பேசினார்.
Follow Us