சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, வாக்குச்சாவடி அளவில் திமுகவைப் பலப்படுத்த வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடுகளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி திருவடந்தை, திருப்பத்தூர், மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இந்த மண்டல மாநாடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று (11-02-26) காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 49 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி, ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இயக்கத்தின் கீழ் முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

Advertisment

இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் பணி என்று வந்துவிட்டால் கழக உடன்பிறப்புகளை அடித்துக் கொள்வதற்கு ஆளே கிடையாது. இதை நான் மட்டுமல்ல எதிரிகளே பல நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுக தான் ஹீரோ. இந்த தேர்தலில் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும் என்று முன்பே சொல்லி இருந்தேன். இதை சாத்தியப்படுத்தி காட்டுவது உங்களுடைய பொறுப்பு. நானோ, அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளர்களோ, மண்டல தொகுதி பொறுப்பாளர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ என்னதான் உழைத்தாலும் உக்திகளை வகுத்தாலும் களத்தில் அதை வெற்றியாக உறுதி செய்யப்போவது நீங்கள் தான். பரம்பரை பரம்பரையாக திமுகவிற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களை சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தேர்தல் என்று வந்துவிட்டால் மக்கள்தான் எஜமானர்கள். அதனால் நம் திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனைகளயும், திட்டங்களையும் அதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்து வரக்கூடியதையும் ஒவ்வொருத்தரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லு வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஆதரவு மனப்பான்மை தான் நிலவுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை எங்குமே இல்லாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. அதை அப்படியே நமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றி வெற்றியை அறுவடை செய்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. 2021ல் இருந்ததை விட தமிழ்நாடு முழுக்க நமக்கான வரவேற்பும், ஆதரவும் கூடியிருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் வாங்கி இருக்கக்கூடிய வாக்குகளை பார்த்தால் தெரியும். நிச்சயமாக 2026லும் 200 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெல்ல முடியும். அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்
.

தற்போதைய சூழலில் திமுகவை தவிர யார் ஆட்சிக்கு வந்தாலும் அது சர்வ நிச்சயமாக டெல்லி பா.ஜ.க ஆட்சியாக தான் இருக்கும் என்று தெள்ளத்தெளிவாக புரிய வையுங்கள். நம் கூட்டணியை தவிர வேறு யாருக்கு வாக்களித்தாலும் இதுவரை நாம் செய்து வரக்கூடிய திட்டங்கள் அனைத்தும் நின்றுவிடும். தமிழ்நாட்டினுடைய தொகுதி அளவை குறைத்துவிடுவார்கள், இதுவரை நாம் சாதித்து காட்டிய வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு போய்விடுவார்கள். வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல் தான் தமிழ்நாட்டில் நடக்கும். நடக்கப்போகிற தேர்தலில் இரண்டு கூட்டணிகளுக்கு இடையில் நடக்கிற தேர்தல் இல்லை. இது தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ. இதை பாமர மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? இதை முடிவு செய்யப்போவது தான் இந்த தேர்தல். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நம் தமிழ்நாட்டை, தாய்நாட்டை காக்க எல்லோரும் திமுகவை ஆதரிக்க வேண்டிய தேவையை விளக்க வேண்டும். ஒன்றிய அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட், பேரிடர் நிவாரணம், கல்வி நிதி என தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய வஞ்சகத்தையும் அதை எதிர்த்து கேள்வி எழுப்பாத அடிமை அதிமுகவின் துரோகத்தையும் மக்கள் முன் தோள் உறிக்க வேண்டும். வெறுப்பை விதைத்து வன்முறையை தூண்டி மக்களை பிளவுப்படுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என துடிக்கிற விஷவிதைகளை தமிழ்நாட்டுக்குள் விடவே கூடாது என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக. பா.ஜ.கவினுடைய டப்பா என்ஜினுக்கு முன்னால் தமிழ்நாட்டினுடைய திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுணியாது” என்று பேசினார்.    

Advertisment