கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மம்பத் புலிக்காலோடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீலாம்பூரில் உள்ள கிளினிக்கிற்கு உடல் நலமில்லாத தனது இரண்டு வயதுக் குழந்தையைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மருத்துவரைப் பார்க்க அந்த பெண் வரிசையில் காத்திருந்தார். அப்போது, கிளினிக்கின் வெளிப்பகுதியில் பகுதியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. பின்னர், குழந்தையின் கழுத்திலிருந்த மூன்றரை கிராம் தங்கச் சங்கிலி காணாமல் போனதைக்கண்டு தாயார் அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி முழுவதும் அவர் தேடிப்பார்த்தபோதும், நகை கிடைக்கவில்லை. 

Advertisment

இந்த நிலையில், சிறிது நேரத்திற்கு முன் அக்குழந்தையை, பெண் ஒருவர் கொஞ்சிக்கொண்டிருந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்தனர். அந்த இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்ட பொது, தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துவிட்டார். இருப்பினும், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது, அங்கிருந்தவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். அப்பெண்ணிடம் விசாரணை செய்தனர். மீண்டும் அவர் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துவிட்டார். 

Advertisment

இருப்பினும், அந்த பெண் தான் நகையை எடுத்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். அதனால், அப்பெண்ணைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும், அந்த பெண் நகையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், காவல்துறைக்கு அந்த பெண்ணின் மீதான சந்தேகம் குறையவில்லை. அதனால், கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தனர். 

siren-police

இதில், காணாமல் போன குழந்தையின் நகை, அந்த பெண்ணின் வயிற்றில் இருப்பது தெரியவந்தது. பின்னர், மருத்துவர்களின் உதவியுடன் குழந்தையின் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சமீனா என்பது தெரியவந்துள்ளது. பெண் ஒருவர் குழந்தையைக் கொஞ்சுவது போல் நடித்து, நகையைத் திருடி விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment