பாக்ஸ்கான் நிறுவன முதலீடு குறித்த பாமக தலைவர் அன்புமணியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார்’ என தமிழக தொழில்துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எப்போதெல்லாம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு நல்லது நடக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணத்தினால் அந்த வேலைவாய்ப்பில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி ஒருவர் தனது குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தில் கொட்டி தீர்க்கிறார்.
இன்றைய உலக அரசியல் சூழலில் ஒரு முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டுவருவது எவ்வளவு கடினம்!. அதிலுள்ள புவிசார் அரசியல் பிரச்சினைகள் (Geopolitical issues) என்னென்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த சிறுபிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிடுவதை இனி அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். நேற்று பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி. இது ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள்.
பல மாதங்களாக ஒரு சில ஊடகங்கள் அரசு எந்தவித புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU - Memorandum of Understanding) செய்தியையும் உறுதிசெய்யாத சூழலில் அவர்களாக யூகித்து எழுதிய செய்திகளை பழைய திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு திட்டம் வேலை வாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதை துறையோ அல்லது நானோ உறுதிசெய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நடப்பு உலகளாவிய வர்த்தக சூழல் தெரியாமல் யார் எதற்காக எதை சொல்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல், அல்லது புரிந்துகொள்ள முடியாமல், அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.