தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்துள்ளார். 

Advertisment

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சென்னையில் இருப்பதை எண்ணி ஆர்வமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். பாஜக, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற கட்சிகளை வழிநடத்தும் எனது அன்பு நண்பரும் சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை நாங்கள் (பாஜகவினர்) சந்தித்தோம். இன்று நாங்கள் மிகச் சிறந்த சந்திப்புகளை நடத்தினோம். எங்கள் அரசியல் பணிகளை ஒன்றாக வலுப்படுத்துவது பற்றி நாங்கள் மிகச் சிறந்த விவாதங்களை நடத்தினோம். 

Advertisment

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்த்துப் போராடுவது பற்றி, ஒரு குடும்பமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அடுத்து வரும் சில மாதங்களுக்கு வகுக்க வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து இன்று நாங்கள் விவாதித்தோம். நாங்கள் தமிழக மக்களைச் சந்திக்கப் போகிறோம். தமிழக இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, திமுகவின் ஊழல் ஆட்சியில் தமிழகம் பாதிக்கப்பட்ட வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக மக்கள் ஒரு நல்ல அரசாங்கத்தைப் பெறுவது, வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு அரசாங்கம், தமிழகப் பெண்கள், தமிழக இளைஞர்கள், தமிழக விவசாயிகள், தமிழக மீனவர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் பிறவற்றிற்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் ஒரு அரசாங்கம் ஆகியவை முக்கியம் ஆகும்.

தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள், தமிழ்நாட்டு வணிகர்களுக்கு, தமிழ் சகோதர சகோதரிகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்கும் அரசாங்கம் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதிமொழி ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியும் கூட ஆகும். இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள பழனிசாமியின் அதிமுக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிற கூட்டணிக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து தமிழ்நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காகப் பாடுபடுவார்கள்” எனப் பேசினார்.

Advertisment