Minister M.R.K. Panneerselvam's criticized Anbumani is the mouthpiece of AIADMK and BJP
கடலூர் மாவட்டம், சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் நகர திமுக சார்பில் ‘என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ குறித்த பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அதில் அவர் பேசியதாவது, “ஒவ்வொரு பூத்திலும் எத்தனை வாக்குகள் உள்ளது. அதனை பொதுமக்களிடம் நேரடியாக சென்று எவ்வாறு வாக்குகளை பெற வேண்டும். தமிழகத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கடந்த 27 மாதங்களாக மகளிர் உரிமை தொகை தலா ரூ.ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. தொகை வழங்கப்படாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் நாங்கள் அத்தொகையை வழங்கியுள்ளோம். தற்போது இந்த மாதம் விடுபட்ட மகளிருக்கு மாதம் ஆயிரம் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதனையாகும். இந்த திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி குறை கூறி வருகிறார். அவர் தற்போது அதிமுக மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக உள்ளார்” என்று பேசினார்.
இந்த நிகழ்விற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், ஏஆர்சி.மணிகண்டன், அப்பு சந்திரசேகர், நகர திமுக துணை செயலர் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் பாரிபூபாலன், மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், விஎன்ஆர். கிருஷ்ண மூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சி.கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார். இந்நிகழ்ச்சியில், திமுக பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், தொகுதி பொறுப்பாளர் பாரி பூபாலன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை செயலாளர் சுப்பு என்கிற வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, திமுக நிர்வாகிகள் இளவரசு உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Follow Us