2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி” என்ற திருக்குறளை வாசித்தார். அதற்கான பொருளாக, “வருவாய் அளவை அறிந்து அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராக காத்து வாழும் வழியாகும்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த உரையின் தொடக்கத்தில், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி உரையாற்றினார். இவ்வாறு இரண்டு மணி நேரம் 22 நிமிடங்கள் என தொடர்ந்து நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், “உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக விளங்குபவர்கள் நம் வேளாண் பெருங்குடி மக்கள். உழவர்கள் உழைக்கவில்லை என்றால் என் நிலத்தில் பிறந்தோர் யாரும் உயிர் வாழ முடியாது.
உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்றார் வள்ளுவர் பெருந்தகை. எனவே தான் உழவர் நலனை காக்கும் வகையில் தமிழ்நாட்டில் 2021- 22ஆம் ஆண்டில் வேளாண்மை துறை என்பதை வேளாண்மை உழவர் நலத்துறை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் உழவர் நலனுக்கான பல சிறப்பான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை 2021- 22ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/17/tn-agri-budget-mrk-panneerselvam-1-2026-02-17-12-51-40.jpg)
விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. 496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். வேளான் பட்ஜெட்டின் போது திமுவைச் சேர்ந்த பெரும்பலான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சை நிறத்துண்டுகளை தோளில் அணிந்திருந்தனர்.
Follow Us