சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கூடு வெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் சார்பில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.இதில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறி வாழ்த்துரை வழங்கினார்.

Advertisment

இதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 1027 மாணவ மாணவியர்களுக்கு ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் வழங்கி மாணவ மாணவிகளிடம் பேசுகையில், “தமிழக முதல்வர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் அவர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையிலும் வேலை வாய்ப்புகளை பெற உதவும் வகையில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 அரசு கல்லூரிகளில் பயிலும் 8228 மாணவர்களுக்கும், 3 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 823 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக” பேசினார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இணைப் பதிவாளர் ஜெகதீஸ்வரன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைய நம்பி, பதிவாளர் சிங்காரவேல், இணைப்பதிவாளர் ஜெகதீஸ்வரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, கூடு வெளி அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மேரி கிறிஸ்டினா, துணை முதல்வர் கிருபா நந்தினி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பாளையங்கோட்டையில்
துணை மின் நிலையம் தரம் உயர்த்தும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.