புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலத்தில் நடந்த தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்! ஓரணியில் தமிழ்நாடு ஏற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, “பீகாரில் பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று தெரிந்ததால் 64 லட்சம் வாக்காளார்களை நீக்கியவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கின்றனர். அது முடியாது. இங்குள்ள ஒவ்வொருவரும் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக வுக்கு வாக்களித்தால் மக்களை மட்டுமல்ல கல்வியையும் காப்பாற்ற முடியாது. இந்திய அளவில் உள்ள முதல் 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முன்னால் நிற்கிறது பெருமையாக உள்ளது.
தேசிய கல்விக்கொள்ளையால் புதிய ஆபத்து இந்தி திணிப்பு. 1938இல் தொடங்கிய மொழிப்போராட்டம் இன்றளவும் தொடர்கிறது. அதனால் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடந்தது. ஆனால் பா.ஜ.க அரசு 2021இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை. இதனால் தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைக்க நினைக்கிறார்கள்.இந்தியாவில் உள்ள மக்களை பாதுகாக்கும் தலைவன் ஸ்டாலின் என்கிறார்கள். தொழிற்சாலை தொடங்க 45 நாளில் அனுமதி கொடுத்தோம். வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், ஒரு வீட்டை பூசி கூட குடியிருக்க முடியாத நிலை தான் வடமாநிலங்களில் உள்ளது.
1989இல் விவசாயிகளுக்கு 13 லட்சம் இலவச மின்சாரம் இணைப்பு தந்தார் கலைஞர். இப்போது திமுக ஆட்சியில் 1.75 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். உரிமை தொகை 1.15 கோடி பேருக்கு கொடுக்கும் அரசு மாணவர்களுக்கு உயர்கல்விக்கும் உதவுகிறது. மேலும், 57 பேரில் 50 பேர் "நான் முதல்வன்" திட்டம் மூலம் யூபிஎஸ்சியில் வென்றனர். திமுக ஆட்சியில் 7.5% உள் இடஒதுக்கிட்டில் 40 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஏழை, எளிய மாணவர்கள் பயனடைகிறார்கள். அன்புக்கரங்கள் திட்டம் தொடக்க விழாவில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள் கண்ணீரோடு தான் இருந்தார்கள். அவர்களின கண்ணீரை துடைக்கத்தான் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்” என்றார்.