சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ரூ.8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவி பொருத்தப்பட்டது. இதனைத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (10.02.2026) மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பறவைக்காய்ச்சல் தொடர்பாக விளக்கம் அளித்துப் பேசுகையில், “காகங்களோ அல்லது கோழி போன்ற பறவை இனங்களோ திடீரென்று இறந்தது என்றாலோ, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனாலோ அவற்றைப் பார்த்தவர்கள், உடனடியாக ஆழத் தோண்டி அதனைப் புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கோழி ஏதாவது இறந்துவிட்டால், அவ்வாறு இறந்த கோழியை யாரும் சாப்பிட வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு கோழி இறைச்சியை உண்பவர்கள் நன்றாக சமைத்த உணவையே உண்ண வேண்டும். ஆப் பாயில் எடுத்துக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இத்தகைய சூழலில் தான் சென்னை, சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை வழங்கினார். அதோடு உறுதிமொழி ஏற்று விழாவில் உரையாற்றினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/11/ma-su-pm-doctor-2026-02-11-09-57-31.jpg)
அதன் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பறவைக்காய்ச்சல் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த முந்தைய பேட்டி குறித்து விளக்கம் அளித்து பேசுகையில், “பறவைக்காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை செய்தியாளர் சந்திப்பில் பறவைக் காய்ச்சல் தொடர்பான கேள்விக்கு நான் அளித்த விளக்கத்தை தவறான புரிதலில் ஆஃபாயில் முட்டை சாப்பிடக் கூடாது என்ற செய்தி வெளிவந்துள்ளது அதற்கான விளக்கம் என்னவென்றால், பறவை காய்ச்சல் பாதிப்பால் ஒரு கோழி இறந்து விட்டால் அதனை சாப்பிடக்கூடாது. மேலும் ஆஃபாயிலாக வேக வைத்த கோழியை சாப்பிடக்கூடாது. முழு பாயிலாக வேக வைத்த கோழியை தான் சாப்பிட வேண்டும் என்று நான் கூறினேன், நன்றாக வேகவைத்த முட்டையை தான் சாப்பிட வேண்டும். ஆஃபாயில் முட்டை சாப்பிட வேண்டாம் என்று நான் கூறவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Follow Us