Minister E.V. Velu said It is natural for tarred roads to deteriorate during the rainy season
வேலூர் மாவட்டம் விமான நிலையம் முதல் அணைக்கட்டு தாலுகா ஆசனாம்பட்டு வரை செல்லும் சாலையை அகலப்படுத்தி வேலூர் முதல் திருப்பத்தூர் வரை செல்லும் முக்கிய சாலையாக மாற்ற வேண்டுமென ரூ.50 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்ய 4 வழி சாலையாக அகலப்படுத்தும் நிகழ்ச்சி இன்று அணைக்கட்டு பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், “முன்னே இரண்டு புயல் அடித்து இதுவரை அடிக்காத அளவிற்கு புயல் அடித்தது. இதற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வேண்டுமென ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் கொடுத்தார்கள். பலமுறை வலியுறுத்தினோம் ஆனால் ஏதும் பணம் வழங்கவில்லை. தற்போது புயல் இல்லை, இனி வரும் காலங்களில் புயல் அடித்தால் அதனால் சாலைகள் பழுதடைந்தால் ஒன்றிய அரசிடம் நாங்கள் முறையாக கேட்பதை கேட்டுக் கொண்டுதான் இருப்போம். அவர்கள் கொடுக்கவில்லை என்பதற்காக முதலமைச்சர் அதை செய்யாமல் விடுவதுமில்லை.
கடந்த முறை புயலடித்த போது ஏராளமான சாலைகள் பழுதடைந்தது. இதனை மாநில அரசு நிதியை வைத்து தான் சீர் செய்தோம். எப்போதும் மழைக் காலங்களில் தார் சாலை பழுதடைவது இயற்கை. இதை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த முடியாது. தண்ணீருக்கும் தாருக்கும் ஒத்துப் போவதில்லை. சில இடங்களில் குழிப் பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். எப்போதும் புயல் அடித்த பிறகு ஆண்டுதோறும் பழுதடைந்த சாலைகளை சீரமைப்போம். இந்த ஆண்டு அதுபோல் நடைபெறுமையானால் முதலமைச்சர் நிதி ஒதுக்குவார் கட்டாயம் சாலையை சீரமைப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இரயில்வே மேம்பாலம் பணி தங்கள் ஆட்சியில் எத்தனை முடிந்துள்ளது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஏற்கனவே சென்ற ஆட்சியில் 70 மேம்பால அமைக்கும் பணியை அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் அதற்கு பக்கத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்தப்படாமல் விட்டு விட்டார்கள். நாங்கள் அதற்காக புது அரசாணை கொண்டு வந்து 36 மேம்பால பணிகளை அவர்கள் அறிவித்ததையே கட்டி முடித்துள்ளோம். மீதமுள்ளவைகளை கட்டிக் கொடுக்க உள்ளோம் அநேகமாக இந்த ஆண்டிலேயே முடிவடைய வாய்ப்புள்ளது. புதிய சுங்கச் சாவடிகளை தொடங்க முயற்சி எடுத்து உள்ளார்கள். அதை பற்றி மத்திய அரசிடம் கேட்க வேண்டும்” என முடித்துக் கொண்டார்.
Follow Us