Minister Chakrabarti responds to EPS allegations Wheat shortage in ration shops?
ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வைத்திருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8 ஆயிரத்து 722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும். நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட மொத்தமாக தோல்வியடைந்ததாக (Total Failure) இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், “ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி ரேஷன் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு முழுவதும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நடப்பாண்டு குறுவைப் பருவத்தில் வரலாற்றுச் சாதனையாக 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரத்து நெல் விவசாயிகளுக்கு 3,249 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் கோதுமையின் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us