தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்களாகப் பேராசிரியர் இராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம். கிருஷ்ணா, இரா.பாலு, ப்ரீடாஞானராணி, பழனி உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றிருந்தனர்.
அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கத் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 01ஆம் தேதி (01.07.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 650 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (08.08.2025) காலை 10.45 மணியளவில் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட அதனைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
அதாவது மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையானது உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாகப் பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்த அறிக்கையில், “3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும்” எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கோவி செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான ஒரு நாளாகப் பெருமையான ஒரு நாளாக இந்த நாளை பார்க்கிறோம். பெருமையான நாள் அப்படியென்று சொல்வது பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மட்டுமில்லை. ஒட்டுமொத்தமாக இந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவன், தமிழ் இனத்தைச் சார்ந்தவன் என்கின்ற முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதல் படி மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை வடிவமைத்து இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கை என்பது முழுக்க முழுக்க பள்ளிக் கல்வித்துறை சார்ந்தது மட்டுமே. அது முன்னாள் நீதி நீதிபதி தலைமையில், கல்வியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அங்கே உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று அனைவரையும் சந்தித்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் ஒரு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கின்றோம். மாநில கல்விக் கொள்கை இந்த கல்வியாண்டு முதலே அமலுக்கு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என்பதற்காக தற்போது அமலில் உள்ள 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த கல்வியாண்டு முதலே ரத்து செய்யப்படுகிறது. எனவே இனி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே னி பொதுத்தேர்வு நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.