தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (24.11.2025) காலை 07.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதே போன்று கோவை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணி வரை இடிமற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் கனமழை எச்சரிக்கை காரணமாகச் சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், மதுரை மற்றும் கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இம்மாவட்டங்களில் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் புவனகிரி ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கனமழை எச்சரிக்கை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். அதோடு திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (24.11.2025) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இதற்கான உத்தரவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார்.
Follow Us