காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக மதிமுகவைச் சேர்ந்த சதன் திருமலைக்குமார் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த நியூ லிங்க் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தில் தனது தொழில் முன்னேற்றத்திற்காக ரூ.1 கோடி கடன் பெற்றிருக்கிறார். 

Advertisment

அதனை தொடர்ந்து அந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக ரூ.50 லட்சம் தொகை கொண்ட இரண்டு காசோலையை அவர் நிறுவனத்தில் வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் வழங்கிய காசோலையை வங்கியில் செலுத்திய போது அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு சதன் திருமலைக்குமார் மீது காசோலை மோசடி புகாரை நிதி நிறுவனம் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சதன் திருமலைக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ ஆன பிறகு, அவர் மீதான வழக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

Advertisment

அப்போது சதன் திருமலைக்குமாருக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் அனைத்து நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார். மேலும், ரூ.1 கோடி பணத்தை இரண்டு மாதத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சதன் திருமலைக்குமார் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து 2 மாத காலம் அவகாசம் கொடுப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.