இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, "09.01.2015-க்கு முன் இலங்கை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குடியேறி, அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்களை சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள், போர்ச்சூழல், பொருளாதார நெருக்கடிகள், திமுக- காங்கிரஸ் கூட்டணியின் மன்னிக்க முடியாத துரோகத்தால் நடந்த இனப்படுகொலை ஆகியவற்றின் வடுக்களைச் சுமந்து, தமிழகத்தை வந்தடைந்தனர்.அவர்களுக்கான உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நீண்டகால கோரிக்கை. எனது அறிவுறுத்தலின்படி, இலங்கைத் தமிழர்களுக்கான அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் கழக உறுப்பினர்கள் கோரி வந்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தின் முதல் படியாக உள்ள இந்த அறிவிப்பினை அதிமுக மிகுந்த மனமகிழ்வோடு வரவேற்கிறது.இதனை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிஅவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சாஅவர்களுக்கும் அஇஅதிமுக சார்பிலும், தமிழக மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மனிதம் தழைத்தோங்கட்டும் ! "என்று தெரிவித்திருக்கிறார்.