திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் கௌசல்யா (20). இவர் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் முடித்து, பொன்னேரி தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். இரண்டாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த தூரத்து உறவினரான அத்தை மகன் கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ் (30) என்பவருடன் கௌசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் கௌசல்யா படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். 

Advertisment

நேற்று கொத்தனார் வேலைக்கு சென்ற போது தனது மனைவி கௌசல்யா தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்ததாக தகவல் வந்ததால் வீட்டிற்கு கதவை உடைத்து  ராஜேஷ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது கௌசல்யா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து சடலத்தை வீட்டிற்கு எடுத்து சென்று மாமனாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisment

இதனை தொடர்ந்து பெண்ணின் தந்தை வந்து பார்த்த போது தலை, முகத்தில் காயம் இருந்ததால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சடலத்தில் காயங்கள் உள்ளதால் பிரேத பரிசோதனை நடத்திட வேண்டும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பெண்ணின் தாய் ரேவதி தனது மகளின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் கௌசல்யாவின் கணவர் ராஜேஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடய அறிவியல் வல்லுநர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி இடையே பெரிய தகராறு ஏதும் இல்லை என எனவும், பெண்ணின் பெற்றோர் கூறி வரும் நிலையில் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான 5 மாதங்களிலேயே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment