Manickam Tagore's provocative hit on Selvapperunthagai
தமிழ்நாடு காங்கிரஸில் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிருப்தி வெளிப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது ஜாதி வன்மத்தை அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமாரும், மாணிக்கம் தாகூர் எம்.பி.யும் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்று (20-ஆம் தேதி) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கர்ணன் என்றும், மருது சகோதரர்களுடன் ஒப்பிட்டும் பேசினார். அதற்கு எதிர்வினையாக, மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “உங்களுக்கு அரசவைப் புலவர்கள் யார் தெரியுமா?” என்று கிண்டலாகவும், சூசகமாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஏன் அரசவைப் புலவர்களைக் கிண்டலாக குறிப்பிட்டார்? தமிழ் இலக்கிய மரபில், மன்னர்களைப் புகழ்ந்து பாடும் புலவர்கள் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தனர். குறிப்பாக சங்க காலத்தில், அரசர்களின் வீரத்தையும், தானத்தையும், நல்லாட்சியையும் போற்றி பாடுவது புலவர்களின் கடமையாகக் கருதப்பட்டது. இவ்வகைப் பாடல்கள் மூலம் மன்னர்களின் புகழ் பரவியதுடன், அதற்குப் பதிலாக புலவர்கள் பரிசு, பொருள் மற்றும் மரியாதை பெற்றனர். அரசவைகளில் இருந்த இந்தப் புலவர்கள் வரலாறு, அரசியல் மற்றும் சமூக நிலைகளைப் பதிவு செய்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
இப்போது புரிகிறதல்லவா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை புகழ்ந்தது மாணிக்கம் தாகூருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்துகொண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவரையே கிண்டல் செய்வது, இது எந்த வகையான அரசியல்?
Follow Us