மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல் பேசிய கருத்து கர்நாடாகாவில் சர்ச்சையானது. அவர் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய நிலையில் அது கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்று எச்சரிக்கைகள் எழுந்தது. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இதனால் கர்நாடகாவில் படம் வெளியாகாவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் படத்தை வெளியிட அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அங்கு இன்னும் படம் வெளியாகவில்லை. 

இதனிடையே மற்ற மாநிலங்கள் மற்றும் பல நாடுகளில் வெளியான இப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளானது. இதனைத் தொடர்ந்து, “நாயகன் போன்று ஒரு படத்தை எதிர்பார்த்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மணிரத்னம்  தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாக பரவியது. 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என்று மணிரத்னம் மன்னிப்பு கேட்கவில்லை என்று மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பில் இருந்து தெரிக்கப்பட்டுள்ளது.  முதலில் பரவிய தகவலின் படி படத்தின் எதிர்மறையான விமர்சனத்தை ஏற்று மணிரத்னம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று பாராட்டிய ரசிகர்கள், தற்போது மெட்ராஸ் டாக்கீஸின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.