திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகைக்கடை பஜாரில் தினேஷ் என்பவர் நகைக் கடை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தினேஷின் மனைவி நந்தினி கடையில் இருந்தபோது, ஒரு நபர் 17 கிராம் எடையுள்ள சங்கிலியை அடகு வைத்து ரூ.1,02,000 பணம் பெற்றுச் சென்றார். பின்னர், கடை உரிமையாளர் அந்த நகையைப் பரிசோதித்தபோது, அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

Advertisment

2

இதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து, கடை உரிமையாளரின் மனைவி நந்தினி, வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவலர்கள் அந்த நபரைத் தேடியபோது, அவர் ஓசூர் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் என்பதும், இவர் மீது ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, மதனை ஓசூரில் கைது செய்த காவலர்கள், வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து ரூ.1,00,000 பணத்தைப் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.