Mamata Banerjee said Justice for Kerala, justice for West Bengal
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு, 1999 ஆம் ஆண்டு தங்கள் மாநிலத்தின் பெயரை, ‘பஷ்சிம் பங்களா’ அல்லது ‘பங்களா’ என்று பெயர் மாற்றம் செய்ய முன் மொழிந்தது. பின்னாளில் 2011 இல் மம்தா பானர்ஜி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தங்கள் மாநிலத்தின் பெயரை ஆங்கிலம் மற்றும் பங்களா ஆகிய இரு மொழிகளிலும், ‘பஷ்சிம் பங்களா’ (மேற்கு வங்காளம்) எனப் பெயர் மாற்றி, தீர்மானத்தை மத்திய அரசிற்குப் பரிந்துரைத்திருந்தார். இந்த தீர்மானத்தையும் மத்திய அரசு நிராகரித்தது.
இதற்கடுத்ததாக, கடந்த 2016 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீண்டும் பெயர் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. அதன்படி, ஆங்கிலத்தில், ‘வங்காளம்’, வங்காள மொழியில் ‘பங்களா’ மற்றும் இந்தியில் ‘பங்களா’ என மாநிலத்தின் பெயரை முன் மொழிந்தது. ஒரே மாநிலத்திற்கு, மூன்று மொழிகளில் வெவ்வேறு பெயர்களைப் பரிந்துரைத்ததால், இந்த தீர்மானமும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றம், மாநிலத்திற்கு, ‘பங்களா’ என்ற ஒற்றைப் பெயரைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது. இருப்பினும், மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றக் கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்தது.
இந்த நிலையில், தென்னிந்திய மாநிலமான கேரளா, தங்கள் மாநிலத்தின் பெயரைக் ‘கேரளம்’ எனப் பெயர் மாற்றக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பிவைத்தது. தற்போது, இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், கேரளா மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாகக் கேரளம் எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
இது குறித்து,மேற்குவங்க முதல்வர் மம்தா தனது எக்ஸ் பக்கத்தில், ‘தென்னிந்திய மாநிலத்திற்குப் பெயர் மாற்ற ஒப்புதல் அளித்ததன் மூலம் பாஜக மற்றும் சிபிஐ (எம்) இடையிலான மறைமுக கூட்டணியைப் புரிந்துகொள்ள முடிகிறது. மேற்கு வங்கத்திற்குப் பங்களா எனப் பெயர் மாற்றக்கோரி பல முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைத்த போதிலும், அந்த தீர்மானங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. கேரளாவுக்கு ஒரு நீதி, மேற்கு வங்காளத்திற்கு ஒரு நீதியா?’ எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us