Mamata Banerjee apologizes to Messi for Controversy over fans' actions in kolkata
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இன்று அதிகாலை இந்தியா வந்துள்ளார். கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், கொல்கத்தாவின் லேக் டவுனில் நிறுவப்பட்டுள்ள தன்னுடைய 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, கொல்கத்தாவின் சால்ட்லேக் மைதானத்தில் நடைபெற்ற மோகன் பாகன் மற்றும் டயமண்ட் ஹார்பர்ஸ் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக மெஸ்ஸி மைதானத்துக்கு வந்தார். அப்போது, அவரை கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறிது நேரம் மைதானத்தில் இருந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்து, தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்தில் தூக்கி எறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மெஸ்ஸியை சிறிதி நேரம் கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ஆத்திரமடைந்து, மைதானத்திற்குள் குதித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த டெண்டுகளை சூறையாடினர். இதையடுத்து மெஸ்ஸியின் ரசிகர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களை அங்கிருந்து வெளியேறச் செய்தனர். இதனால், கால்பந்து மைதானம் கலவரம் நடந்த இடம் போல் மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெஸ்ஸி இந்தியா வந்த முதல் நாளிலேயே இச்சம்பவம் நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சால்ட்லேக் மைதானத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், அதிர்ச்சியடைந்தேன். கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த துர்திர்ஷ்டவசமான சம்பவத்திற்காக லியோனல் மெஸ்ஸி மற்றும் அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடன் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை மற்றும் மலைவாழ் விவகாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை நான் அமைக்கிறேன்ன். இக்குழு, இந்த சம்மவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பொறுப்பை நிர்ணயிக்கும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். மீண்டும் ஒருமுறை, அனைத்து விளையாட்டு ஆர்வலர்களிடமும் எனது மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us