மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள முக்குடி கிராமத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதன் பரப்பளவு 1300 ஏக்கர் என்று கூறப்படுகிறது. விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் புங்கை மர தோப்பு இருக்கிறது. நான்காண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் விவசாயக் கிணறு ஒன்று தோண்டப்பட்டது.
இந்நிலையில் அந்த கிணற்றில் அடையாளம் தெரியாத ஆணினுடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மிதப்பதாக ஆடு மேய்க்க சென்றவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்புவனம் போலீசார் அனுப்பானடி தீயணைப்பு நிலைய மீட்புப்பணி குழுவின் உதவியுடன் ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினர். மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான பகுதியில் இருந்து ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.