மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன்படி இந்த பள்ளியில் அருகில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் 1ஆம் முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்களைப் பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் ரவிச்சந்திரன் என்பவர் ராஜபாளையம் - திருமங்கலம் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பத்திரகாளி அம்மன் கோவில் அருகே வந்தபோது வேனில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
இதனைக் கண்டு உடனடியாக சுதாரித்த ஓட்டுநர் ரவிச்சந்திரன் வேனை நிறுத்தியுள்ளார். அதோடு வேனில் இருந்த உதவியாளருடன் சேர்ந்து பள்ளி குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார். அதே சமயம் வேனில் தீ பிடித்து எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினரும் அவர்களுக்கு உதவியாகப் பள்ளி மாணவர்களை விரைந்து மீட்டனர். இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.இருப்பினும் வேனில் பற்றிய தீ மளமளவெனப் பரவியதால் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
எனவே இந்த தீ விபத்து சம்பவம் குறித்து உடனடியாகத் திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவல உதயகுமார் தலைமையில் தீயை அணைத்தனர். மேலும் வேனில் இருந்து மீட்கப்பட்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மாற்றுப் பேருந்தில் பள்ளி நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். பள்ளி வேன் திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us