சென்னை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட போக்குவரத்து பிரிவில் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் முதன்மை காவலராக மேகநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மேகநாதன் வழக்கம்போல் பள்ளிகரணை அருகே நேற்று (08.12.2025) இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று சோதனைக்கு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவலர் மேகநாதன் அந்த காரை தன் இருசக்கர வாகனத்தில் பின் சென்றவாறு துரத்தியுள்ளார்.
அப்போது அந்த கார் காவலர் மேகநாதன் மீது பயங்கரமாக மோதியது. அதோடு இதில் மேகநாதன் சுமார் 20 மீட்டர் தூரம் வரை சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் காவலர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாகச் சென்னை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மது போதையில் சாய்ராம் (வயது 32) என்ற இளைஞர் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. பள்ளிகரணை அருகே வாகனத் தணிக்கையின் போது கார் மோதிய விபத்தில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us