சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து நல்லகண்ணு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவக் கண்காணிப்பில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன் தினம்  (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மூ. வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தோழர் நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார். தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.  எளிய மக்களுக்கு அர்ப்பணித்த தலைவர் தற்போது இயற்கையோடு போராடுகிறார்.  அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும். அதன்பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி அறிவிக்கும். அதுவரை சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம். எனவே பொதுமக்கள், நல்லகண்ணு உடல்நிலை குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம். மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல் தான் அதிகாரப்பூர்வமானது ஆகும்” எனத் தெரிவித்தார்.