நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாகத் தொடர்ந்து அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பு குறித்தும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தன. அதே நேரத்தில், இந்த விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படாத காரணத்தினாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நேற்று (04.02.2026) மாலை 5 மணியளவில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்ற இருந்தார். ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியில் காரணமாக மோடி உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் இருக்கையிலிருந்து எழுந்து அவையின் மையப்பகுதிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் பிரதமரின் இருக்கையை நோக்கி திரளாகச் சென்றனர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் அவையில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து பாஜக "இது வரலாற்றில் முன் எப்போது இல்லாத நிகழ்ந்துள்ள வருந்தத்தக்க ஒரு சம்பவம் ஆகும். எதிர்க்கட்சிகள் ஜனநாயக நெறிமுறைகளைச் சீர்குலைக்கின்றன" போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக " தீர்க்கப்படாத தேசிய பிரச்சனைகளின் மீதான கவனத்தை ஈர்க்கவே, இந்த போராட்டம் நடைபெற்றது" என எதிர்க்கட்சிகள் விளக்கமளித்துள்ளன. இதற்கிடையே மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/modi-rs-l-murugan-2026-02-05-15-35-03.jpg)
இருப்பினும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று (05.02.2026) மாலை 5 மணியளவில் உரையாற்ற உள்ளார். எனவே, "மாநிலங்களவையில் பிரதமரின் உரை நிச்சயம் கவனிக்கப்படும் என்றும், அது பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களுக்கு ஒரு திசையை நிர்ணயிக்கும் விதமாக அமையும்" என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
இதற்கிடையே ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பதில் சொல்லப் பயந்து அவைக்கு வரவில்லை” எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “நேற்று சபையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் பார்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமரின் நாற்காலியை எப்படி நெருங்கினார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று எனக்கு தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், சபைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்."
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/lok-sabha-2026-02-05-15-35-18.jpg)
மக்களவையில் சில உறுப்பினர்களின் நடத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று (04.02.2026 - புதன்கிழமை) இருந்தது. பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சிகள் தாக்கச் சதி செய்துள்ளனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. தவறுதலாக எதுவும் நடத்து விடக்கூடாது என்பதாலேயே நான் தான் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்றேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்குத் துண்டுப் பிரசுரம், பதாகைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us