டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணியிட மாற்றம் செய்யபட்டார்.
இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த ரகசிய அறிக்கையை சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது, பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரிய தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மக்களவை எம்.பிக்கள் 145 பேரும், மாநிலங்களவை எம்.பிக்கள் 63 பேரும் கையெழுத்திட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட உள்ள குழுவின் கண்டுபிடிப்புகளை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று கூறி தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் இந்த வழக்கில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து, உள்ளக விசாரணையை எதிர்த்து அறிக்கையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரின் மனுவையும், அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜனாதிபதிக்கு பரிந்துரைத்ததையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிகக் 3 பேர் கொண்ட குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 17ஆம் அமர்வு நாள் இன்று (12-08-25) தொடங்கியது. அப்போது, நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய 146 எம்.பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். அதனை தொட்டர்ந்து அவர், “நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் செயல்முறை தொடங்க வேண்டும். ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றம் ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் பதவி நீக்க தீர்மானத்தை ஏற்றுக்கொண்டோம். மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று கூறி அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
அந்த குழுவில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிந்தர் மோகன் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அடங்குவர். மக்களவையால் அமைக்கப்பட்ட இந்த குழு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை சமர்பிக்கும். அதன் பின்னர், அந்த அறிக்கை மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மான வாக்கெடுப்பு விடப்படும் என்று கூறப்படுகிறது. நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானம் குறித்து ஆளும் அரசு மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் ஒரே பக்கத்தில் இருப்பதால், இந்த செயல்முறை சுமூகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.