Lok Sabha adjourned without Prime Minister's address for Opposition parties create ruckus
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 2 வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில், எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சீன ஊடுருவல் விவகாரம் குறித்துப் பேசினார். இந்த உரையின் போது முன்னாள் ராணுவத்தளபதி நரவனேவின் புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். இதற்கு அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் அமித்ஷா ஆகியோர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பாஜக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் இடையூறு செய்தனர். இதனால் அவை முடங்கியது.
இதையடுத்து, நேற்று வழக்கம் போல நாடாளுமன்ற அவை தொடங்கியது. இதில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும், அமெரிக்க விற்கு அடிபணிந்து இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடனான இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அதே நேரத்தில், ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து எரிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் தமிழக எம்பி உட்பட எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று காலை அவை தொடங்கியது முதலே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், அமளி தொடர்ந்தது. இதனால் மலை 5 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் அவை தொடங்கியதும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பதாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பிரதமர் உரையின்றி அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Follow Us