கடந்த மாதம் 23-ஆம் தேதி, சவேரியார்புரத்தைச் சேர்ந்த விவசாயி நெல்சன் டேவிட், தனது பம்பு செட்டுக்கு தண்ணீர் பாய்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அவர் தூங்கியபோது அவரைத் தாக்கி, அவரிடம் இருந்த சங்கிலி மற்றும் மோதிரங்கள் உள்ளிட்ட 9½ பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, சாத்தான்குளம் காவல் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில், டேவிட் மற்றும் மாரியப்பன் ஆகிய காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே ஊரைச் சேர்ந்த அருள்ராஜின் மகன் கிறிஸ்டோபர் (வயது 31) மற்றொரு நபருடன் சேர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கிறிஸ்டோபர், நெல்லையில் வசித்து வழக்கறிஞர் தொழில் செய்து வந்துள்ளார். அவரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றச் செயலில் ஈடுபட்ட பிரதீஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். வழக்கறிஞர் தொழில் செய்து கொண்டு, தனது சொந்த ஊரைச் சேர்ந்த விவசாயியிடம் கொள்ளையடித்த இந்தச் சம்பவம், பேய்க்குளம், சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.