புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் வடகாடு - மாங்காடு  ஏவி பேரவை சார்பில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 50 அடி உயரம் கொண்ட தைலமரத்தில் கிரீஸ், விளக்கெண்ணெய், சோற்றுக்கற்றாழை மற்றும் வழுக்கும் தன்மை கொண்ட எண்ணெய்கள் பூசப்பட்ட மரம் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இயந்திரம் மூலம் நடப்பட்டு போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பனங்குளம், வடகாடு, புள்ளாண்விடுதி உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றது. இந்த 5 அணிகளுக்கும் பல்வேறு சுற்றுக்களாக 5 பேரில் தொடங்கி வழுக்கு மரத்தில் ஏற முயன்றனர். தொடர்ந்து ஒருவர் மீது ஒருவராக 10 பேர் வீதம் வழுக்கு மரத்தில் ஏறினர். ஒவ்வொரு சுற்றிலும் அந்த வழுக்கு மரத்தில் ஒருவர் மீது ஒருவர் ஏறுவதும் பின்பு வழுக்கிக்கொண்டு சறுக்கி விழுவதும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து மரத்தின் உச்சியில் உள்ள வெற்றிக் கொடியை எட்டுவதற்கு தொடர்ந்து இளைஞர்கள் முயற்சி செய்த காட்சிகள் காண்போரை வியக்க வைத்தது.

Advertisment

cli

இறுதியில் பனங்குளம் கிங் பிஷர் அணியினர் ஒருவர் மீது ஒருவராக வேக வேகமாக ஏறி 50 அடி உயரம் கொண்ட வழுக்கு மரத்தின் உச்சி கொடியை 1 நிமிடத்தில் தொட்டு வெற்றி பெற்றனர். இந்த ஊரில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றி பெற்றனர். மேலும் அதிக உயரம் கொண்ட வழுக்கு மரத்தை வீரர்கள் லாவகமாக ஏறி உச்சி தொட்டு வெற்றி வாகை சூடியதை தொடர்ந்து வான வேடிக்கைகள் முழங்க அந்த அணியினருக்கு உற்சாகமாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற பனங்குளம் கிங்பிஷர் அணியினருக்கு ரூ.20,026 ரொக்கப் பரிசும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மாலையில் தொடங்கி  நள்ளிரவு வரை சுமார் 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வழக்கு மரம் ஏறும் போட்டியை வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.