Kidnapped businessman rescued and admitted to hospital with bloody injuries
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சேர்ந்தவர் கிஷோர் குமார் (36). இவர், தாளவாடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மேலும் ஹார்ட்வேர் கடை மற்றும் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். கிஷோர் குமார் இரவில் வியாபாரத்தை முடித்து நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை அடைத்ததும் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நடை பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவர், கோவை தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தனது தம்பியான ராகேஷ் குமாரிடம் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென கிஷோர் குமார், என்னை காப்பாற்றுங்கள் என்று அலறி உள்ளார். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் கிஷோர் குமாரை, அவரது தம்பி ராஜேஷ்குமார் செல்போனின் தொடர்பு கொண்டார். ஆனால் கிஷோர் குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ராகேஷ் குமார் இது குறித்து தாளவாடி போலீசில் புகார் அளித்தார். சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சண்முகசுந்தரம், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தலமலை சாலையில் தேடினர். அப்போது அங்குள்ள ஓடை அருகே கிஷோர் குமாரின் காலணிகள், அவர் பயன்படுத்திய ஹெட் போன் மற்றும் தொப்பி ஆகவில்லை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த இடத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டன. இதனால் அவர் கடத்தி செல்லப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? ரத்தக்கரை இருந்ததால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். கிஷோர் குமார் பல்வேறு தொழில்கள் செய்வதால் தொழில் போட்டி காரணமாக அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் தாளவாடி அடுத்த கும்பாரண்டி என்ற இடத்தில் காரில் வந்த கும்பல், கிஷோர் குமாரை இறக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டது. கடத்தல் கும்பல் தாக்கியதில் காயமடைந்த கிஷோர் குமார் தாளவாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரில் கடத்தி சென்ற கும்பல் அவரை இரவும் முழுவதும் காரில் வைத்து தாக்கியுள்ளது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். தற்போது தாளவாடி அரசு மருத்துவமனையில் கிஷோர் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடித்த பிறகு தான் அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Follow Us