மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர்.

Advertisment

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதலில் 6 மாதங்களாக நடைபெற்று வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி, அதன் பின்னர் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

Advertisment

ஒட்டுமொத்தமாக ஓராண்டாக அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், மணிப்பூரின் புதிய முதல்வராக பா.ஜ.க மூத்த தலைவரான யம்நம் கெம்சந்த் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். குடியரசுத் தலைவரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நேற்று (03-02-26) டெல்லியில் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அமித் ஷா, மணிப்பூரின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மணிப்பூரின் புதிய முதல்வராக பா.ஜ.கவின் மூத்த தலைவரான யம்நம் கெம்சந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக யம்நம் கெம்சந்த் சிங் இன்று (04-02-06) பதவியேற்றார். அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, கெம்சந்த் சிங் இன்று மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரை தொடர்ந்து அவரது தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது. 

Advertisment