கேரளா மாநிலம் ஆலப்புழா புன்னாரா பகுதியைப் பகுதியை சேர்ந்தவர் உஷா ஜோசப் (51). இவர் தற்போது ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆலப்புழா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு வந்த உஷா, நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்ற போதும் வயிற்று வலி சரியாகவில்லை. இதன் காரணமாக, அவர் நீண்ட காலமாக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டு வந்தார்.

Advertisment

இதனால், அவருக்கு சிறுநீர் கழிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உஷா, உடனடியாக சிறுநீரக மருத்துவரைச் சந்தித்தார். அப்போது, எடுக்கப்பட்ட எக்ஸ்ரே சோதனையில், அதிர்ச்சி தரத்தக்க முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், 10 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்தரிக்கோல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து உஷா, முன்னதாக கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். இதை கேட்ட மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.

Advertisment

பிறகு, அந்த மருத்துவர்கள் அந்த கத்தரிக்கோலை நாங்களே அகற்றிவிடுகிறோம். இதைப் பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த உஷா, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார். இந்த விவகாரம் பூதாரகனமான நிலையில்,இந்த சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் தோபியாஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக வேணு கோபால் எம்பியும் உறுதியளித்துள்ளார். அதன் பின்னர், நேற்று அறுவை சிகிச்சை மூலம் உஷாவின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து புன்னப்ரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை காவல் கண்காணிப்பாளர் அமைத்துள்ளார். மருத்துவர்களின் அலட்சியத்தால் கருப்பை நீக்கச் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்துத் தைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment