கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அதோடு, பலரும் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளையும் இழந்து பல்வேறு துன்பத்திற்கு ஆளாகினர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.  அந்த சமயத்தில், கேரளா அரசு அவர்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.

Advertisment

அதன்படி, சமீபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாகக் கேரளா அரசு அறிவித்திருந்தது. இதன் நீட்சியாக, முதல் கட்டமாகக் கட்டி முடிக்கப்பட்ட 300 வீடுகளை இந்த மத இறுதிக்குள் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Advertisment

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 555 பேர்கள் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களை அரசே திரும்பச் செலுத்தும் எனக் கேரளா அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு வங்கிகளில் பெற்றிருந்த 1620 கடன்களை அரசே ஏற்றுள்ளது. இதன் மதிப்பு 18.75 கோடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா வங்கி தள்ளுபடி செய்த 93 லட்சம் கடனையும், அரசே திரும்பச் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் மதிப்பீடுகள் மக்களைப் பாதிக்காத வகையில், வங்கிகளின் குழுவுடன் இணைந்து இணைந்து செயல்படத் தலைமைச் செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.