ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிடுவோம் என்ற ரீதியில் திமுகவுக்கு காங்கிரஸ் தரப்பினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

இந்த  பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (17-02-26) தமிழகம் வந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு பதிலாக காந்தி பெயரை நீக்கி மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி என்ற திட்டத்தை கண்டித்து முகப்பேர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தை முடித்த பின்பு, முகப்பேர் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கே.சி.வேணுகோபால் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, புதிதாக நியமிக்கப்பட்ட 77 மாவட்டத் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.  கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூட்டணி குழப்பம் எற்படும் வகையில் கருத்துக்களை தவிர்க்க வேண்டும், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும், கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.சி.வேணுகோபால், “ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல, அது தனிநபர்களின் நிலைபாடு தான். 2ஆம் கட்ட தலைவர்களின் கருத்து காங்கிரஸின் கருத்தல்ல. இது குறித்து பொதுவெளியில் பேச யாருக்கும் உரிமையில்லை. கூட்டணி தொடர்பான இறுதி முடிவை கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து ராகுல் காந்தி முடிவு எடுப்பார். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் திமுக - காங்கிரஸ் உறுதியாக உள்ளது. திமுகவுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

Advertisment