தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர்ப் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு கடந்த 27ஆம் தேதி (27.072025) அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கவினைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித்தைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் உயிரிழந்த கவினும், சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் கவின் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தந்தையும், காவல் ஆய்வாளருமான சரவணனை போலீசாராக் கைது செய்யப்பட்டார். இத்தகைய சூழலில் தான் கவினின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4வது நாளாக நேற்று (31.07.2025) வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மற்றொருபுறம் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி இந்த வழக்கு குறித்த ஆவணங்களை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி பெற்ற நிலையில், முதற்கட்டமாக கவின் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கவினின் தோழி பணியாற்றிய மருத்துவமனைக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கவினின் உடலை வாங்குவதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உடலை வாங்கச் சம்மதம் தெரிவித்துள்ளனர். முன்னதாக பெண்ணின் தாயையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்து கவினின் உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே கவினின் தந்தை சந்திரசேகர், அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலரும் இணைந்து இன்று (01.08.2025) காலை 9 மணி அளவில் அவரது உடலை பெற்றுக்கொள்வதற்காகத் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்ல உள்ளனர். அங்கு போலீசாரிடம் உயிரிழந்த கவினின் முகத்தைக் காட்டவேண்டும், இந்த கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் காட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைக்க உள்ளர்காகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் அவரது உடலை பெற்று சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.