தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகர்ப் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்குக் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி (27.072025) அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் சுர்ஜீத் என்பவர் கவினைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், உயிரிழந்த கவினும், சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
அதே சமயம் கவின் கொலை வழக்கு தொடர்பாகத் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணனை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட நீதிபதி கண்காணிப்பின் கீழ் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கவின் படுகொலை வழக்கில் யாரும் தப்பிக்கக் கூடாது. விசாரணை முறையாக நடைபெறும் சூழலில் மேற்கொண்டு எந்த உத்தரவும் தேவையில்லை. முறையாக விசாரணை நடத்தி 8 வாரத்தில் இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டு” என உத்தரவிட்டுள்ளனர். மற்றொரு புறம் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் தலைவர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.