அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(50). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதியினரின் மகள் ரிதன்யா(27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
புதுப்பெண் ரிதன்யா சேவூர் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, பூச்சி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு, தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில், ‘எனது மரணத்திற்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் செய்த சித்ரவதை தான் காரணம்’ என்று ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கலங்க வைத்தது.
இதனிடையே, ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவிநாசியில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சேவூர் போலீசார், கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரையும் கைது செய்தனர். மாமியார் சித்ராதேவி மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதால், நிபந்தனையின் பெயரில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள கவின் குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது எனத் தொடர்ந்து எதிர்ப்பு வைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் ஏழாம் தேதி ஒத்திவைத்துள்ளது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம்.