கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என பலர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 04324 259306, 7010806322 (வாட்ஸ்அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது உயிர்காக்கும் பிஎல்எஸ் ஆம்புலன்ஸ் இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது வரை 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 30 உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் ஏமூர் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து தவெக நிர்வாகிகள் இதுவரை யாரும் வெளிப்படையாக பேசாத நிலையில் தவெகவின் நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் பாதுகாப்பிற்காக அவர் வீட்டுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்ல இன்று காலை கரூர் செல்ல விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கு செல்வது குறித்து விஜய் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.