கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 04324 259306 , 7010806322 (வாட்ஸ் அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது உயிர்காக்கும் பிஎல்எஸ் ஆம்புலன்ஸ் இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது வரை 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 14 பேர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு பெண் உடல் மட்டும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் கரூருக்கு வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் துபாய் சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கரூருக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அரசாங்கமும் காவல் துறையும் பொதுக்கூட்டத்திற்கு வருவோருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் அங்கு கூடி இருக்க கூட்டத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். ஒரு நேரத்தைக் குறிப்பிடும் போது அந்த நேரத்தில் வந்து பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. பல மணி நேரம் கழித்து வந்து பொதுக்கூட்டத்தை நடத்தும் பொழுது அதில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நான் யாரையும் குற்றம் சொல்வது பொருத்தமாக இருக்காது. விலை மதிக்க முடியாத உயிரை இழந்து இருக்கின்றோம். இதுவரை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற பொதுக் கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டதில்லை. தமிழகத்தில் நமது சகோதர சகோதரிகள் விலை மதிக்க முடியாத உயிரை இழந்துள்ளனர். அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/28/a5375-2025-09-28-08-41-11.jpg)